முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையை தீர்க்கக்கோரி தேனியில் நேற்று மாலை வேன் டிரைவர் ஒருவர் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து தேனியில் கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் பஸ் நிலையம் வெறிச்சோடியது.
மதுரை சாலை சுந்தரம் சேர்வை லைன் பகுதியில் வசித்து வந்தவர் சண்முக சுந்தரம். இவருடைய மனைவி சண்முகத்தாய். இவர்களுக்கு சீனிவாசன், சரவணன், பாலு, ஜெயப்பிரகாஷ் நாராயணன் (வயது 31) என்ற 4 மகன்களும், வசந்தி, சாந்தி, சந்திரா என்ற 3 மகள்களும் உள்ளனர்.
தந்தை சண்முகசுந்தரம் ஏற்கனவே இறந்துவிட்டார். மேலும் பாலுவும் சமீபத்தில் இறந்து விட்டார். ஜெயப்பிரகாஷ் நாராயணனுக்கு திருமணம் ஆகவில்லை. இவருடைய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் திருமணம் நடந்து விட்டது.
இதனையடுத்து ஜெயப்பிரகாஷ் நாராயணன் தனது தாயார் சண்முகத்தாயுடன் வீட்டில் வசித்து வந்தார். இவர் தேனியில் உள்ள தனியார் டிராவல்ஸ் ஒன்றில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். தேனி நேரு சிலை பகுதிக்கு அவர் நேற்று மாலை 4 மணியளவில் வந்தார். அங்கு யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், தான் வைத்திருந்த பெட்ரோல் கேனை திறந்து தனது உடலில் பெட்ரோலை ஊற்றிவிட்டு நேருசிலை பீடத்தின் மீது ஏறி தனது உடலில் தீவைத்துக் கொண்டார்.
உடல் முழுவதும் குப்பென்று தீப்பிடித்ததும் வேதனை தாங்க முடியாமல் சத்தம்போட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடிவந்த தேனி நகர போலீசார் உடனடியாக தீயில் கருகி உயிருக்கு போராடிய அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது தீக்குளித்த வாலிபர் ஜெயப்பிரகாஷ் நாராயணன், `முல்லைப் பெரியாறு அணை பிரச்சினைக்காக தீக்குளித்தேன்' என்று உருக்கமாக கூறி உள்ளார்.
தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளித்த டாக்டர்கள் அவருக்கு 90 சதவீத தீக்காயம் ஏற்பட்டு இருந்ததால் அவரை மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் நேரு சிலையை முன்பு தீக்குளித்தால் நேரு சிலை முழுவதும் புகை படிந்து கருமையாக காட்சி அளித்தது.
தேனி நகர் நேருசிலை முன்பு டிரைவர் ஒருவர் முல்லைப் பெரியாறு அணை பிரச்சினைக்காக தீக்குளித்த சம்பவம் பற்றிய தகவல் காட்டுத்தீ போல் பரவியதையடுத்து அங்கு பதற்றமான சூழல் நிலவியது. இந்த சூழலில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக உண்ணாவிரத போராட்டம் முடிவுபெறும் நிலையில் இருந்ததால் போலீசார் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக தேனி நகர் பஸ்நிலையத்தில் நின்றிருந்த அனைத்து பஸ்களையும் தேனி அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு திருப்பி அனுப்பினர். உடனே அனைத்து பஸ்களில் இருந்தும் பயணிகள் இறக்கி விடப்பட்டு தேனி பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் பணிமனைக்கு புறப்பட்டு சென்றன.
இதனால் பயந்துபோன தேனி பஸ் நிலைய பகுதி மற்றும் மதுரை சாலை கடைக்காரர்கள் தங்கள் கடைகளை உடனடியாக அடைத்தனர். ஆட்டோ, கார் போன்ற அனைத்து வாகனங்களும் பஸ் நிலைய பகுதியில் இருந்து எடுத்து செல்லப்பட்டதால் பதற்றமான சூழல் காணப்பட்டது.
மேலும் பயணிகள் அனைவரும் பரிதவிப்புடன் பஸ் நிலைய பகுதியில் காத்து நின்றனர். பின்னர் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் உண்ணாவிரத போராட்டம் முடிவடைந்த நிலையில், தேனி நகரில் ஓரளவு இயல்பு நிலை திரும்பியதை அடுத்து நேற்று மாலை 6 மணிக்கு மேல் தேனி நகர பஸ் நிலையத்திற்கு மீண்டும் பஸ்கள் கொண்டு வரப்பட்டு பஸ்கள் இயக்கப்பட்டன. அதன்பிறகு தேனி நகரில் உள்ள கடைகளும் திறக்கப்பட்டன





0 comments: on "முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையை தீர்க்கக்கோரி வேன் டிரைவர் தீக்குளிப்பு"
Post a Comment