தலைப்புச் செய்தி

Thursday, January 6, 2011

எம்.எல்.ஏ. குத்திக்கொலை: என்னை தூக்கில் போட்டாலும் கவலைப்பட மாட்டேன் கைதான ஆசிரியை ஆவேசம்

பீகார் மாநிலம் பூர்னியா தொகுதி பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. ராஜ்கிஷோர் தனது அலுவலகத்தில் பார்வையாளர்களை சந்தித்து கொண்டு இருந்த போது குத்திக் கொலை செய்யப்பட்டார். ரூபம்பதக் என்ற 40 வயது பள்ளி ஆசிரியை எம்.எல்.ஏ.வை குத்திக் கொன்றார். எம்.எல்.ஏ.வைச் சுற்றி அவரது ஆதரவாளர்கள் 150 பேர் திரண்டு இருந்தனர்.
அவர்களுடன் எம்.எல்.ஏ. பேசிக் கொண்டு இருந்தார். அப்போது ரூபம் பதக் சால்வையை போர்த்தியவாறு உள்ளே புகுந்து எம்.எல்.ஏ.வின் வயிற்றில் கத்தியால் குத்தினார். அவர் அலறியபடி ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். ரூபம்பதக் கத்தியை சால்வைக்குள் மறைத்து வைத்து இருந்தார்.

 சால்வையை போர்த்தி இருந்ததால் அவரை யாருக்கும் அடையாளம் தெரிய வில்லை. எம்.எல்.ஏ. ரத்த வெள்ளத்தில் சாய்ந்ததும் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே ரூபம்பதக்கை பிடித்து அடித்து உதைத்தனர். பின்னர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். அவர் வைத்திருந்த 10 அங்குலம் நீளம் உள்ள கத்தி கைப்பற்றப்பட்டது.

எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் தாக்கியதில் மயக்கம் அடைந்த ரூபம்பதக் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்கைக்குப் பின் அவர் உடல்நிலை தேறி வருகிறது. போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பட்டதாரியான ரூபம்பதக் பூர்னியாவில் பள்ளிக்கூடம் நடத்தி வந்தார்.

பள்ளியின் முதல்வராகவும் இருந்து வந்தார். அவரது கணவர் அசோக் பதக் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்தவர். முதலில் மணிப்பூர் மாநிலத்தில் இருவரும் பள்ளியில் பணியாற்றி வந்தனர். பின்னர் பூர்னியாவுக்கு திரும்பினார்கள். அங்கு தனியாக பள்ளிக்கூடம் நடத்தி வந்தனர். இதற்கிடையே ரூபம்பதக்கின் கணவர் மணிப்பூர் மாநிலம் சென்று விட்டார். அங்கு தனியாக வேலை பார்த்து வந்தார். 2007-ல் ரூபம்பதக் பள்ளிக்கூடத்தை தொடங்கினார். அந்த பள்ளியை எம்.எல்.ஏ. ராஜ்கிஷோர் கேசரிதான் தொடங்கி வைத்தார். பள்ளிக்காக பல்வேறு உதவிகள் செய்துள்ளார். அப்போதுதான் அவர்களுக்குள் அறிமுகம் ஏற்பட்டது. இந்த நிலையில் எம்.எல்.ஏ. மீது திடீர் என்று கற்பழிப்பு புகார் கூறினார்.

ராஜ்கிஷோர் கேசரியும், அவரது நண்பர் பிபின்ராயும் தன்னை 3 ஆண்டுகளாக கற்பழித்து வந்ததாக புகாரில் கூறியிருந்தார். போலீசார் முதலில் நடவடிக்கை எடுக்க தயங்கினார்கள். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரூபம்பதக் கொடுத்த புகாரின் பேரில் கழன்சிகாட் போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். ஆனால் அதன் மீது மேல் நடவடிக்கை எதுவும் எடுக்க வில்லை.

இதனால் கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார். வழக்கில் எம்.எல்.ஏ. மீது குற்றம் இல்லை என்று தீர்ப்பு கூறப் பட்டது. இதை எதிர்த்து அப்பீல் செய்தார். வழக்கை வாபஸ் பெறக்கோரி ரூபம் பதக்குக்கு மிரட்டல்கள் வந்தன. இதனால் ஆத்திரம் அடைந்து ரூபம்பதக் பார்வையாளர் போல் வந்து எம்.எல்.ஏ.வை தீர்த்து கட்டி விட்டார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் ரூபம் பதக்கிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். உண்மையை ஒப்புக் கொண்ட அவர் அதற்காக சிறிதும் கவலைப்படவில்லை. ரூபம்பதக் கூறுகையில், எம்.எல்.ஏ.வை கத்தியால் குத்தியதற்காக நான் கவலைப்படவில்லை. நீண்ட நாட்களாக அவர் என்னை குறி வைத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்தார். இனிமேல் என்னை தூக்கில் போட்டால் கூட கவலைப்பட மாட்டேன் என்றார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "எம்.எல்.ஏ. குத்திக்கொலை: என்னை தூக்கில் போட்டாலும் கவலைப்பட மாட்டேன் கைதான ஆசிரியை ஆவேசம்"

Post a Comment