தலைப்புச் செய்தி

Saturday, January 15, 2011

நிலநடுக்க சேதத்திற்கும் ஊழலுக்கும் தொடர்பு: ஆய்வுகளில் புதிய தகவல்

வாஷிங்டன் : நிலநடுக்கத்தினால் ஏற்படும் சேதங்களுக்கும், ஊழலுக்கும் தொடர்பு இருப்பதாக புதிய ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. இயற்கை பேரழிவான நிலநடுக்கத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து, லண்டன் இம்பீரியல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் நிக்கோலாஸ் அம்பிரேசஸ், கொலராடோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் ராகேர் பில்காம் உள்ளிட்டோர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வுகளை மேற்கொண்டனர்.



இந்த ஆய்வில் கூறியிருப்பதாவது:

கடந்த 30 ஆண்டுகளாக, உலகின் பல்வேறு பகுதிகளில் நடந்த நிலநடுக்கங்களில் சிக்கி உயிரிழந்தவர்களில், 83 சதவீதம் பேர் கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர். நிலநடுக்கத்தால் ஏற்படும் மிகப்பெரிய சேதமும் கட்டடங்கள் இடிந்து விழுவது தான். 1980ல் தொடங்கி, சராசரியாக ஆண்டுக்கு 18 ஆயிரத்து 300 பேர் நிலநடுக்கங்களில் உயிரிழந்துள்ளனர்.இதற்கு காரணம், செல்வ செழிப்புமிக்க நாடுகளே. தங்கள் நாட்டில் நடக்கும் கட்டடங்களின் கட்டுமானப் பணிகளை கவனிப்பதில்லை. மண் திண்மை இல்லாத இடங்களில் கட்டடங்கள் கட்ட அனுமதி கொடுப்பது, தரமற்ற கட்டுமானப் பொருட்களை கொண்டு கட்ட அனுமதியளிப்பது உள்ளிட்ட காரணங்களால், நிலநடுக்கம் ஏற்படும் போது, அவை மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின்றன.

பெரும்பாலான நாடுகள் இந்த விஷயத்தில், மெத்தனம் காட்டினாலும், சில நாடுகளில் இந்த விதிமுறைகள் கட்டாயமாக கடைபிடிக்கப்படுகின்றன. கடந்த 2010ல் நியூசிலாந்து நாட்டில் ரிக்டர் அளவுகோலில் 7 புள்ளி அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.ஆனால், இந்த நிலநடுக்கத்தினால், உயிரிழப்பு ஒன்று கூட ஏற்படவில்லை. பெரிய அளவில் சேதங்களும் ஏற்படவில்லை.

ஆனால், கரீபியன் கடல் பகுதியில் அமைந்துள்ள ஹைதி நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்.கட்டுமானத் துறையில், பல லட்சம் கோடி ரூபாய் பணம் புழங்குகிறது. இந்த தொகை, ஆண்டுதோறும் பல மடங்கு அதிகரித்து வருகிறது. எனவே, இதில் முறைகேடுகள் நடப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று நிபுணர்கள் ஒப்புக் கொள்கின்றனர்.இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "நிலநடுக்க சேதத்திற்கும் ஊழலுக்கும் தொடர்பு: ஆய்வுகளில் புதிய தகவல்"

Post a Comment