பாலஸ்தீனம்மீது ஏழாவது நாளாக விமானத்தாக்குதலைத் தொடரும் இஸ்ரேல், காசாவிலுள்ள சர்வதேச ஊடகக் கட்டடத்தின்மீது இரண்டாவது முறையாக தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் சர்வதேச ஊடகத்துறையினர் 6 பேர் படுகாயமடைந்தனர்.
பாலஸ்தீனத்திலுள்ள காஸா பகுதிமீது இஸ்ரேல் ஏழாவது நாளாக தொடர்ந்து விமானத்தாக்குதலை நடத்திவருகிறது. இதில் இதுவரை 111 பாலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 850 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலியானோரில் 30 மேற்பட்ட குழந்தைகளும் 40 க்கு மேற்பட்ட பெண்களும் அடங்குவர். காயமடைந்தவர்களிலும் குழந்தைகளும் பெண்களும் பெருமளவில் உள்ளனர்.
காஸாவுக்கான மூன்று பாதைகளை இஸ்ரேல் அடைத்து வைத்துள்ளதால் போதிய மருந்துகளோ உணவோ கிடைக்காமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். மின்சாரமும் காஸாவின் பெரும்பாலான இடங்களில் இல்லாமல் காஸா இருளில் மூழ்கியுள்ளது.
காஸாவிலுள்ள ஹமாஸ் தலைமையகத்தை நோக்கி தாக்குதல் நடத்துவதாக கூறும் இஸ்ரேல், பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புகள்மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. தாக்குதல் நடந்தபிறகு, தவறுதலாக நடந்துவிட்டதாக காரணமும் கூறுகிறது. நேற்று ஒரு வீட்டின்மீது தாக்குதல் நடத்தியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு, ஹமாஸ் தலைமையத்தின்மீது நடத்திய தாக்குதல் பிழையாகிவிட்டது என காரணம் கூறிய இஸ்ரேல், சற்று முன்னர் ஜபல்யா அகதிகள் முகாம்மீது நடத்திய மற்றொரு தாக்குதலில் கணவன், மனைவி மற்றும் இரு குழந்தைகள் உட்பட நான்கு பேரைக் கொலை செய்துள்ளது. மேலும் பலர் படுகாயமுற்றுள்ளனர்.
குடியிருப்புகள் மட்டுமன்றி, வங்கி, தண்ணீர் டேங்குகள், ஊடகக் கட்டிடங்கள், விளையாட்டு அரங்கங்கள் போன்றவற்றையும் இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்திவருகிறது. பிபிசி, சி என் என், அல் ஜஸீரா முதலான சர்வதேச ஊடகத்துறையினரின் கட்டிடத்தின்மீது ஒருமுறை தாக்குதல் நடத்தியத்தைத் தொடர்ந்து சர்வதேச அளவில் இஸ்ரேலுக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியிருந்தது. இந்நிலையில் நேற்று மீண்டும் இரண்டாவது முறையாக ஊடகத்துறை கட்டிடத்தின்மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் 6 பத்திரிக்கையாளர்கள் படுகாயமடைந்தனர். ஒருவர் கொல்லப்பட்டார். கடந்த ஞாயிறன்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 8 பத்திரிக்கையாளர்கள் படுகாயமடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இத்தாக்குதல் குறித்து இஸ்ரேல் பிரதமரின் ஊடகத்துறை தொடர்பாளர் கூறும்போது, "ஹமாஸின் அல் அக்ஸா தொலைகாட்சி நிலையத்தின்மீதே தாக்குதல் நடத்தினோம். ஹமாஸ், ஊடகத்துறையினரை மனிதக்கேடயமாகப் பயன்படுத்துகின்றனர்." எனக்கூறியுள்ளார். காஸாவில் நடக்கும் கொடூரத்தை வெளி உலகம் அறிந்துவிடக்கூடாது என்பதற்காகவே இஸ்ரேல் சர்வதேச ஊடகத்துறையினர்மீது தாக்குதல் நடத்துவதாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மேலும், பாலஸ்தீனத்திலுள்ள இஸ்லாமிய தேசிய வங்கிமீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் வங்கி கட்டிடம் முழுமையாக சேதமடைந்தது. அரசு ஊழியர்களுக்கான மாத ஊதியம் இந்த வங்கியின் மூலமே வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
கடந்த புதன்கிழமை காசாமீது தாக்குதல் துவங்கிய இஸ்ரேல், இதுவரை 1350 குண்டுகளை விமானம் மூலம் ஏவியுள்ளது. அதே சமயம் சுமார் 700 ராக்கெட்களை ஹமாஸ் இஸ்ரேல்மீது ஏவியுள்ளது. இதில் மூன்று இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். சர்வதேசத்தின் அமைதிக்கான அழைப்பை நிராகரித்துள்ள இஸ்ரேல், தற்போது சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தரைப்படையினரை காஸா எல்லையில் குவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய கிழக்கு பகுதியில் தற்போது ஏற்பட்டுள்ள இந்த அமைதியின்மையினை முடிவுக்குக்கொண்டுவரை எகிப்தில் அமைதி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக செய்திகள் கூறுகின்றன.
0 comments: on "இரத்தத்தில் நனையும் பாலஸ்தீனம்"
Post a Comment