தலைப்புச் செய்தி

Wednesday, June 6, 2012

முல்லைப் பெரியாறு விவகாரம்: மீண்டும் தமிழகத்தை பிரச்சினைக்கு இழுக்கும் கேரளா


இந்திய மாநிலமான கேரளாவில் உள்ள முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வுக்குழுவினர் நடத்திய சோதனையால் ஏற்பட்ட துளைகளை அடைக்க சென்ற தமிழக அதிகாரிகளை கேரள அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அணையின் உறுதித் தன்மையை ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதி ஆனந்த் தலைமையில் உயர்மட்டக் குழு ஒன்றை அமைத்தது.
இக்குழு, அணையை ஆய்வு செய்து அணை உறுதியாக உள்ளது. தமிழக அரசு கோருவது போல அணையின் நீர் மட்டத்தை 142 அடிக்கு உயர்த்தலாம் என்பன உள்ளிட்ட பரிந்துரைகளை உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் தாக்கல் செய்தது.


இதற்கிடையே முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் குறித்து உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழுவினர் பலகட்ட ஆய்வுகளை மேற்கொண்டனர்.


இதுதொடர்பாக நிபுணர்கள் குழுவினர் முல்லைப் பெரியாறு மற்றும் பேபி அணை ஆகிய பகுதிகளில் பல்வேறு இடங்களில் பல அடி ஆழத்திற்கு குழி தோண்டி பெரியாறு அணையின் பலம் குறித்து இயந்திரங்கள் உதவியுடன் ஆய்வுப்பணிகள் மேற்கொண்டு அதற்கான அறிக்கையையும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.


முல்லைப் பெரியாறு அணையின் உறுதித்தன்மை குறித்த அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதன் நகல்கள் இரு மாநில அரசுகளிடம் வழங்கப்பட்டுவிட்டன. மேலும் அணையை பராமரி்க்கும் பொறுப்பு தமிழகத்திடம் உள்ளது. ஆகையால் அங்கு போடபட்ட துளைகளை அடைக்க தமிழக அரசு முடிவு செய்திருந்தது.


இதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு முல்லைப் பெரியாறில் முக்கிய பகுதிகளில் 5 இடங்களிலும், பேபி அணையில் 1 இடத்திலும் தோண்டப்பட்ட துளைகளை நவீன தொழில்நுட்பத்துடன் அடைக்க தமிழக அதிகாரிகள் சென்ற போது கேரள அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.


இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில் துளைகளை அடைக்க அனுமதிக்கவிட்டால் தமிழக பொலிஸ் படைகளை குவிக்க நேரிடும் என எச்சரித்தார். இதைத்தொடர்ந்து கேரள அனுமதித்தது.


கடந்த சில நாட்களாக தமிழக அதிகாரிகள் துளைகளை அடைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த சூழ்நிலையில் முல்லைப் பெரியாறில் எஞ்சியுள்ள துளைகளை அடைக்க இன்று தமிழக அதிகாரிகள் சென்றனர்.


இவர்களுடன் சிமெண்ட் மூடைகள் 5 லொரிகளில் கொண்டு செல்லப்பட்டன. அப்போது அங்கிருந்த கேரள அதிகாரிகள் தடுத்து நிறுத்தி வாக்குவாதம் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.


தமிழக பொறியாளர் ராஜேஷ் என்பவர் கேரள அதிகாரிகளிடம் விளக்கினார். இருப்பினும் பணிகளை மேற்கொள்ளவிடாமல் தடுத்து முட்டை போட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


தற்போது வல்லக்கடவு சோதனைச்சாவடியில் லொரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கேரளாவின் இந்த அடாவடியால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "முல்லைப் பெரியாறு விவகாரம்: மீண்டும் தமிழகத்தை பிரச்சினைக்கு இழுக்கும் கேரளா"

Post a Comment