தலைப்புச் செய்தி

Monday, June 11, 2012

இஸ்ரேல் ஆக்கிரமிப்பின் 45வது ஆண்டு நிறைவு தினம்: பாலஸ்தீனியர்கள் போராட்டம்


கடந்த 1976ஆம் ஆண்டு நடைபெற்ற 6 நாள் போரில் மேற்கு கரை, காசா பகுதி, கிழக்கு ஜெருசலேம் ஆகிய பகுதிகளை இஸ்ரேல் கைப்பற்றியது.
இதன் 45வது ஆண்டு தினத்தை முன்னிட்டு நூற்றுக்கணக்கான யூதர்களும், அரேபியர்களும் பங்கேற்ற எதிர்ப்புப் பேரணி டெல் அவிவ் நகரில் நடைபெற்றதாக இஸ்ரேலிய பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹாரெட்ஸ் என்ற இடதுசாரி சிந்தனை மிக்க பத்திரிகையின் இணையத்தளம் வெளியிட்டுள்ள செய்தியில், சனிக்கிழமை இரவு நடைபெற்ற இந்தப் பேரணியில் 1000க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றதாக தெரிவித்துள்ளது. எனினும் இஸ்ரேலிய இராணுவ வானொலி சில நூறு பேர்களே பேரணியில் பங்கேற்றதாக தெரிவித்துள்ளது.
“ஆக்கிரமிப்பு அகலாத வரை சமூக நீதி கிடைக்காது” என்ற முழக்கத்துடன் அவர்கள் பேரணியில் பங்கேற்றதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டது.
பாலஸ்தீனர்களும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தினர்.
மேற்கு கரையில் கட்டப்பட்டுள்ள இஸ்ரேலிய குடியிருப்புகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சுமார் 300 பாலஸ்தீனர்கள் நேற்று முன்தினம் மதியம் போராட்டம் நடத்தினர்.
ரமல்லா பகுதிக்கு வடக்கில் உள்ள பீத் நுபா கிராமத்தில் இராணுவத்தினர் மீது கற்களை எரிந்தும், டயர்களைக் கொளுத்தியும் பாலஸ்தீனியர்கள் போராட்டம் நடத்தினர்.
பாதுகாப்புப் படைகள் வீசிய கண்ணீர் புகை குண்டுகளாலும், ரப்பர் குண்டுகளாலும் போராட்டக்காரர்கள் சிலர் காயமடைந்தனர்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "இஸ்ரேல் ஆக்கிரமிப்பின் 45வது ஆண்டு நிறைவு தினம்: பாலஸ்தீனியர்கள் போராட்டம்"

Post a Comment