| இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் பணிநீக்கம் செய்யப்பட்ட 13 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்களையும் உடனடியாக பணியில் அமர்த்த தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. |
| தமிழ்நாட்டில் திமுக ஆட்சியின் போது ஒவ்வொரு பஞ்சாயத்திலும் மக்கள் நலப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். கிட்டத்தட்ட 13,500 மக்கள் நலப் பணியாளர்கள் பணியாற்றி வந்தனர். பஞ்சாயத்தால் மேற்கொள்ளப்படும் பணிகளை இவர்கள் செய்து வந்தனர். இவர்கள் உள்ளாட்சித் துறையின் கீழ் வருவார்கள். தற்காலிகப் பணியாளர்களான இவர்களுக்கு கடந்த திமுக அரசு அடுத்த ஆண்டு மே31ம் திகதி வரை பணி நீட்டிப்பு ஆணை வழங்கியிருந்தது. இந்நிலையில் நவம்பர் 8ம் திகதி இரவோடு இரவாக அத்தனை பேரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அரசின் இந்த நடவடிக்கைக்கு மக்கள் நலப் பணியாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். பணி நீக்கத்தை எதிர்த்து மக்கள் நலப் பணியாளர்களின் 2 சங்கங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதை விசாரித்த உயர்நீதிமன்றம் பணி நீக்க உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்திருந்தது. இந்நிலையில் இன்று(23.1.2012) தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில் மக்கள் நலப் பணியாளர்கள் நீக்கத்தை ரத்து செய்வதாகவும் உடனடியாக அனைத்து மக்கள் நலப் பணியாளர்களையும் தமிழக அரசு மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என்றும் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. |





0 comments: on "மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை கிடைத்தது: உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு"
Post a Comment