தலைப்புச் செய்தி

Thursday, July 28, 2011

ராஜினாமா செய்ய எதியூரப்பா மறுப்பு

கர்நாடக சுரங்க ஊழல் குறித்த லோக் ஆயுக்தா அறிக்கை மீதான பாஜக எம்.பிக்கள் குழுக் கூட்டத்தை முதல்வர் எதியூரப்பா புறக்கணித்து விட்டு பெங்களூர் திரும்பினார். இக்கூட்டத்தில் எதியூரப்பாவை பதவி விலகுமாறு கேட்டுக் கொள்ளும் முடிவை பாஜக தலைமை எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

கர்நாடக சுரங்க ஊழல் குறித்து லோக் ஆயுக்தா நேற்று 20,000க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட அறிக்கையை தாக்கல் செய்தது. இதில் எதியூரப்பா, அவரது குடும்பத்தினர், மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் குமாரசாமி, காங்கிரஸ் எம்.பி. அனில் லாத் உள்ளிட்டோர் பெருமளவில் மோசடி செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து எதியூரப்பா பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இந்த நிலையில் நேற்று அவசரமாக டெல்லி கிளம்பி வந்தார் எதியூரப்பா.

அங்கு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை. நான் ஏன் விலக வேண்டும்?.

எங்களது தலைவர்கள் அனைவரும் எனக்கு ஆதரவாக உள்ளனர். அனைத்து எம்.எல்.ஏக்களும் எனக்கு ஆதரவாக உள்ளனர். எனவே ராஜினாமா என்ற கேள்வியே எழவில்லை.

எதையும் நீங்களாக கணிக்காதீர்கள். நான் கட்சித் தலைவர் நிதின் கத்காரியுடன் ஆலோசனை நடத்தவுள்ளேன். எனது நிலையையும், லோக் ஆயுக்தா அறிக்கை விவரத்தையும் அவரிடம் விளக்குவேன்.

லோக் ஆயுக்தா அறிக்கையில் புதிதாக எதுவும் இல்லை. எல்லாமே பழைய விவகாரங்கள்தான். பல்வேறு கோர்ட்களில் ஏற்கனவே நிலுவையில் இருப்பதைத்தான் தொகுத்துக் கூறியுள்ளனர்.

வியாழக்கிழமையன்று பெங்களூர் அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டியுள்ளேன். அதில் லோக் ஆயுக்தா அறிக்கை குறித்து விவாதிக்கப்படும் என்றார் எதியூரப்பா.

பின்னர் கட்சியின் தலைவர் கட்காரியை அவர் சந்தித்தார். அப்போது அவரை பதவி விலகுமாறு பாஜக தலைமை நேரில் கேட்டுக் கொண்டது. இருப்பினும் தனது லிங்காயத்துக்கு சமூக எம்எல்ஏக்களின் கணக்கைக் காட்டி பதவி விலக எதியூரப்பா மறுத்து வருகிறார். தன்னை நீக்கினால் ஆட்சி கவிழும் என எச்சரித்துள்ளார் எதியூரப்பா.

இதையடுத்து அடுத்து என்ன செய்வது என்பது குறித்து ஆலோசிக்க பாஜகவின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் கட்காரி தலைமையில் இன்று டெல்லியில் நடக்கிறது. அதில் கட்சியின் உயர் மட்டத் தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர். இதில் பங்கேற்குமாறு எதியூரப்பாவையும் அழைத்திருந்தனர். ஆனால் அவர் கூட்டத்திற்கு வராமல் பெங்களூர் கிளம்பிச் சென்றுவிட்டார்.

இக்கூட்டத்தில் எதியூரப்பாவை ராஜினாமா செய்ய கேட்டுக் கொள்வது என்ற முடிவு எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால்தான் எதியூரப்பா பங்கேற்கவில்லை என்று தெரிகிறது. எதியூரப்பா பதவி விலக மறுத்தால் அவரை முதல்வர் பதவியிலிருந்து நீக்குவது என்ற முடிவுக்கு பாஜக தலைமை வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கத்காரி தலைமையில் கூடியுள்ள இக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படவிருப்பதால் கர்நாடக அரசியல் களம் மேலும் சூடாகியுள்ளது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "ராஜினாமா செய்ய எதியூரப்பா மறுப்பு"

Post a Comment