தலைப்புச் செய்தி

Sunday, July 31, 2011

2ஜி: எனக்குப் பங்கில்லை - பிரணாப் முகர்ஜி

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டிலோ, விலை நிர்ணயத்திலோ எனக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.



2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கு மத்திய அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்தபோது, அக்குழுவின் தலைவராக பிரணாப் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



தில்லியில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மேலும் கூறியது: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு, விலை நிர்ணயம் விஷயத்தில் அப்போது நான் எதுவும் செய்திருக்க முடியாது. ஏனெனில் அதன் விலை நிர்ணயம் குறித்த விஷயம் அமைச்சர்கள் குழுவின் அதிகாரத்துக்குள் வரவில்லை. அதனை அத்துறை அமைச்சகமே கவனித்துக் கொண்டுள்ளது. இந்த விஷயங்களை கவனித்துக் கொள்ளத்தான் தனி அமைச்சகமும் உள்ளது.இந்த விவகாரத்தில் மத்திய அமைச்சர்களைக் குறி வைத்து பல்வேறு தவறான தகவல்கள் வெளியாகி வருகின்றன என்றார் பிரணாப்.



அமைச்சர்களின் அதிகாரத்தைக் குறைக்க வேண்டும்: மத்திய அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ள எல்லையில்லாத அதிகாரத்தைக் குறைக்க வேண்டும். இது தொடர்பாக ஊழல் ஒழிப்புக்கான மத்திய அமைச்சர்கள் குழு தனது பரிசீலனைகளை அளித்துள்ளது. இதனை மத்திய சட்டம், பணியாளர் மற்றும் பயிற்சித் துறை அமைச்சகம் பரிசீலித்து வருகிறது என்றார். ஊழலை ஒழிக்கும் நடவடிக்கைகள் தொடர்பான மத்திய அமைச்சர்கள் குழுவின் தலைவராக பிரணாப் உள்ளார்.



லோக்பாலில் பிரதமர்... தொடர்ந்து லோக்பால் மசோதா குறித்துப் பேசிய அவர், லோக்பால் மசோதா விசாரணை வரம்புக்குள் பிரதமரைக் கொண்டு வந்தால் நிலையற்றதன்மை, நிச்சயமற்ற சூழ்நிலையும் ஏற்பட்டு விடும். எனவேதான் பிரதமருக்கு லோக்பால் மசோதாவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.



நமது அரசியல் முறைப்படி பிரதமர் என்பவர், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர். அவரை மையமாக வைத்துதான் அரசு இயங்குகிறது. எனவே அவரையும் லோக்பால் விசாரணையில் சேர்ப்பது ஏற்புடையதாக இருக்காது என்றார்.



மத்திய அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ள லோக்பால் மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் இருக்கப்போவது குறித்த கேள்விக்கு, மக்கள்குழுவினர் தயாரித்த மசோதா சிறப்பானது என்றால், அதனை அரசியல் கட்சிகளிடம் எடுத்துச் சென்று அவர்களின் ஆதரவுடன் நாடாளுமன்றத்தில் விவாதம் இன்றியே நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று பிரணாப் தெரிவித்தார்.



கறுப்புப் பண விவகாரம்: இந்தியர்கள் வெளிநாடுகளில் இருந்து பெற்ற பணம், சொத்துகள் போன்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இப்போது நடைபெறும் வெளிநாட்டு பணப் பரிமாற்றங்களும் கண்காணிக்கப்படுகின்றன. சுவிஸ் வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கறுப்புப் பணம் குறித்த முழுவிவரங்களும் இந்த ஆண்டு இறுதிக்குள் முழுமையாகக் கிடைத்து விடும். சுவிட்சர்லாந்து நாட்டுடன் இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தை இந்தியா மேற்கொண்டுள்ளது.



முன்பு மத்தியில் ஆட்சியில் இருந்த பாஜக, கம்யூனிஸ்ட் ஆதரவு அளித்த கூட்டணி ஆட்சி ஆகியவை கறுப்புப் பண ஒழிப்புக்கு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இப்போதைய அரசுதான் கறுப்புப் பணத்துக்கு எதிராக உறுதியான நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்றும் பிரணாப் கூறினார்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "2ஜி: எனக்குப் பங்கில்லை - பிரணாப் முகர்ஜி"

Post a Comment