தலைப்புச் செய்தி

Sunday, May 15, 2011

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தப்பட்டுள்ளது

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு சனிக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. சென்னையில் ஒரு லிட்டர் ரூ.67.22-க்கு விற்கப்படும் என "இண்டேன்' நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.



பொதுத்துறை நிறுவனங்களான இந்திய ஆயில் நிறுவனம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகியவை இந்த விலை உயர்வை அறிவித்துள்ளன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 90 டாலராக அதிகரித்துள்ளது எனவே பெட்ரோல் விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்று பெட்ரோலிய நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.


5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்றதால் இந்த ஆண்டில் பெட்ரோல் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. தேர்தல் முடிவுகள் வெளியான மறுநாளே பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.



"சர்வதேச அளவில் பெட்ரோலின் விலை ரூ. 9 முதல் ரூ.10 வரை அதிகரித்துள்ளது. ஆனால் இப்போது அதில் பாதி அளவுதான் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அடுத்து வரும் மாதங்களில் பெட்ரோல் விலை மேலும் உயர்த்தப்படலாம்' என்று பெட்ரோலிய நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.



டீசல், எரிவாயுவின் விலை உயருமா? பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டாலும், டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணை ஆகியவற்றின் விலை இப்போது உயர்த்தப்படவில்லை. ஆனால் இவற்றின் விலையும் விரைவில் அதிகரிக்கப்படும் என்றே தெரிகிறது.



சென்னையில் எவ்வளவு? சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.61.93-க்கு விற்கப்பட்டு வருகிறது. லிட்டருக்கு ரூ.5 உயர்த்தப்பட்டுள்ளதால் வரிகள் உள்பட அனைத்தையும் சேர்த்து ஒரு லிட்டர் ரூ.67.22-க்கு விற்கப்படும் என எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.



"பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம்' என்று மத்திய அரசு கடந்த ஆண்டு ஜூனில் உத்தரவிட்டது. அப்போது முதல் இதுவரை (இப்போதைய விலை உயர்வு உள்பட) 8 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.



உயரும் விலைவாசி: பெட்ரோல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருள்களின் விலை அதிகரிக்கக் கூடும் என்று தெரிகிறது. விலை உயர்வு காரணமாகவும், இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் சென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் சனிக்கிழமை மாலையில் இருந்து வாகன ஓட்டிகளின் கூட்டம் அலைமோதியது. குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு பெட்ரோல் விற்பனை நிறுத்தப்பட்டது. இதனால், மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். பெட்ரோலை இப்போதைய விலையில் விற்பனை செய்யாமல் விலை உயர்வு அமலுக்கு வந்த பிறகு விற்றால் கூடுதல் லாபம் கிடைக்கும் என்பதால் பல இடங்களில் சனிக்கிழமை மாலையே விற்பனை நிறுத்தப்பட்டதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தப்பட்டுள்ளது"

Post a Comment