தலைப்புச் செய்தி

Sunday, May 15, 2011

கனிமொழி ஜாமீன் மனு: மே 20-க்கு ஒத்திவைப்பு

புது தில்லி, மே 14: 2 ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கனிமொழி ஜாமீன் மனு மீதான தீர்ப்பு இம்மாதம் 20-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதுவரை கனிமொழி தினமும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.



2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேட்டில் முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ராசாவுக்கு இணையான பங்கு கனிமொழிக்கும் உள்ளது என்று குற்றம் சாட்டிய சிபிஐ, கனிமொழி, கலைஞர் டிவி நிர்வாகி சரத்குமார் ஆகியோரது பெயர்களை இரண்டாவது குற்றப் பத்திரிகையில் சேர்த்தது.



இந்த வழக்கில் தங்களை நீதிமன்றக் காவலில் வைக்கக் கூடாது என கனிமொழியும் சரத்குமாரும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இது குறித்து கடந்த மே 6-ம் தேதி நடந்த விசாரணையில் கனிமொழி சார்பில் மூத்த வழக்கறிஞர் ராம் ஜேட்மலானி ஆஜரானார். 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் கனிமொழிக்கு எந்தத் தொடர்பும் இல்லை என ஜேட்மலானி வாதாடினார்.



இந் நிலையில் கனிமொழி எம்.பி. சென்னை வருமான வரி அலுவலகத்தில் கடந்த 12, 13- ம் தேதிகளில் நேரில் ஆஜரான பிறகு வெள்ளிக்கிழமை இரவு விமானம் மூலம் புதுதில்லி வந்தார். சனிக்கிழமை காலையில் வழக்கம் போல் கனிமொழி தனது கணவர் அரவிந்தனுடன் பாட்டியாலா நீதிமன்ற வளாகத்தில் உள்ள உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார்.



கனிமொழி மனு மீதான விசாரணையில், அவருக்கு ஜாமீன் வழங்கலாமா என்பது குறித்து சனிக்கிழமை தீர்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவரது மனு மீதான தீர்ப்பை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஒ.ஒ.பி. சைனி வரும் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.



இந்த வழக்கு ஏற்கெனவே கடந்த 7 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. பின்னர் அது சனிக்கிழமைக்கு (மே 14 ) ஒத்திவைக்கப்பட்டது. சனிக்கிழமை வழக்கு எடுத்துக்கொள்ளப்படும் போது ஜாமீன் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை தி.மு.க. வட்டாரத்தில் இருந்தது. இந்நிலையில் இவ்வழக்கை நீதிமன்றம் இரண்டாவது முறையாக ஒத்திவைத்துள்ளது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "கனிமொழி ஜாமீன் மனு: மே 20-க்கு ஒத்திவைப்பு"

Post a Comment