தலைப்புச் செய்தி

Saturday, January 29, 2011

பெட்ரோல் விலை உயர்வை மக்கள் தாங்கித்தான் ஆக வேண்டும்: மத்திய நிதி அமைச்சர்!

நஷ்டத்தைக் காரணம் காட்டி மீண்டும் பெரிய அளவில் பெட்ரோல் விலையை உயர்த்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இந்த விலை உயர்வை மக்கள் தாங்கித்தான் ஆக வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். பெட்ரோல் மீதான விலைக் கட்டுப்பாடு கடந்த ஆண்டு ஜூன் மாதம் நீக்கப்பட்டது. இதையடுத்து உலகச் சந்தையில் கச்சா எண்ணை விலைக்கு ஏற்ப உள்நாட்டில் பெட்ரோல் விலையை உயர்த்திக்கொள்ள எண்ணை நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.


இதையடுத்து கடந்த ஜூன் மாதம் முதல் நடப்பு ஜனவரி வரை 6 மாத காலத்தில் 8 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் சென்னையில் 1 லிட்டர் பெட்ரோல் ரூ.52.13 ஆக இருந்தது. தற்போது 1 லிட்டர் பெட்ரோல் ரூ.63.36 ஆக உயர்ந்து விட்டது. இந்த நிலையில் உலகச் சந்தையில் கச்சா எண்ணை விலை உயர்ந்து வருவதால் எண்ணை நிறுவனங்களுக்கு 1 லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.1.27 இழப்பு ஏற்படுவதாகவும் இதை ஈடுகட்டுவதற்காக அடுத்த மாத மத்தியில் பெட்ரோல் விலையை உயர்த்த எண்ணை நிறுவனங்கள் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் இதுபற்றி மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் நிருபர்கள் கேட்டபோது, "உலகச் சந்தையில் கச்சா எண்ணை விலை உயரும் போது அதற்கு இணையாக உள்நாட்டிலும் பெட்ரோல் விலையை உயர்த்துவதை தவிர வேறு வழி இல்லை. உலகச் சந்தையில் பெட்ரோல் விலை உயர்ந்ததால் உள்நாட்டுச் சந்தையிலும் பெட்ரோல் விலையை உயர்த்தித்தான் ஆக வேண்டும். எண்ணை நிறுவனங்களில் தொடர்ந்து இழப்பை தாங்கிக் கொண்டிருக்க முடியாது. அந்த நிறுவனங்களுக்கு பணம் வானத்தில் இருந்து கொட்டவில்லை.

எனவே கச்சா எண்ணை விலை உயர்வின் ஒரு பகுதியை மக்கள் தலையில் தான் சுமத்தியாக வேண்டும். இதை மக்கள் தாங்கித்தான் ஆகவேண்டும். வேறு வழியில்லை", என்றார்.

"கடந்த 2008-ம் ஆண்டு உலகச் சந்தையில் கச்சா எண்ணை விலை 147 டாலராக இருந்தபோது இந்தியாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.52 ஆகத்தான் இருந்தது. தற்போது கச்சா எண்ணை விலை 90 டாலர் ஆக இருக்கும்போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.60-க்கு மேல் உயர்ந்தது ஏன்?" என்று நிருபர்கள் மீண்டும் கேட்டனர்.

இதற்கு நேரடியாக அவரால் பதிலளிக்க முடியவில்லை. மாறாக, "பொதுவான விலை உயர்வு, உற்பத்தி செலவு மற்றும் இதர செலவுகள் காரணமாகவே பெட்ரோல் விலை இப்போது அதிகரித்துள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைத்து விற்பனை செய்ததால் எண்ணை நிறுவனங்களுக்கு நடப்பு நிதியாண்டில் ரூ.65 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இனியும் எண்ணை நிறுவனங்களுக்கு மானியம் வழங்க முடியாது," என்று சமாளித்தார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "பெட்ரோல் விலை உயர்வை மக்கள் தாங்கித்தான் ஆக வேண்டும்: மத்திய நிதி அமைச்சர்!"

Post a Comment