தலைப்புச் செய்தி

Saturday, January 29, 2011

எகிப்துக்கு எதிரான மாபெரும் கிளர்ச்சியில் அணிசேரும் மக்கள்வெள்ளம்

எகிப்தில் ஹுஸ்னி முபாரக் அரசுக்கு எதிராக வெடித்துள்ள கிளர்ச்சிக்குத் தமது ஆதரவைத் தெரிவிக்குமுகமாக உலகின் பல நாடுகளிலும் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் எகிப்தியத் தூதுவராலயங்கள் முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் குதித்துள்ளனர்.


துருக்கியத் தலைநகர் அங்காராவிலுள்ள எகிப்தியத் தூதுவராலயத்தின் முன் குழுமிய பெருந்தொகையான மக்கள், எகிப்தில் கிளர்ச்சிசெய்யும் மக்களுக்குத் தமது ஆதரவை வெளிக்காட்டும் சுலோகங்களைத் தாங்கி நின்றனர்.

லண்டன் மாநகர எகிப்தியத் தூதுவராலயத்தை முற்றுகையிட்ட பொது மக்கள், கிளர்ச்சியாளர்களுக்கெதிரான அரச அடக்குமுறைகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என்று கோரிக்கைவிடுத்தனர்.

அண்மையில் புரட்சிவெடித்த டியூனீஸியத் தலைநகர் டியூனிஸில் எகிப்தியப் புரட்சியை ஆதரிக்கும் கோஷங்களை முழங்கியபடி ஏராளமான மக்கள் பேரணியொன்றில் கலந்துகொண்டனர். 'எகிப்திய மக்களுக்குப் பக்கபலமாக டியூனீஸிய மக்கள் உள்ளனர் என்பதைத் தெரிவித்து எகிப்தியர்களுக்குத் தைரியமளிக்கவே நாம் இங்கே கூடியுள்ளோம். நாங்கள் துன்புற்றது போலவே அந்த மக்களும் நீண்டகாலத் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். இப்போது மாற்றமொன்றுக்கான காலம் கனிந்துவிட்டது' என பேரணியாளர் ஒருவர் கருத்துரைத்துள்ளார்.

எகிப்தியக் கிளர்ச்சியாளர்களுக்குத் தம்முடைய ஆதரவைத் தெரிவிக்குமுகமாக விரைவில் ஜெர்மனியிலும் ஒரு பேரணி ஒழுங்குசெய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஹுஸ்னி முபாரக்கின் அரசை எதிர்த்து எகிப்தியத் தலைநகர் கெய்ரோவிலும் ஏனைய நகரங்களிலும் கிளர்ச்சியில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான பொதுமக்களை ஆளும் தரப்பு இராணுவம் வன்முறைப் பிரயோகத்தின் மூலம் அடக்கியொடுக்கப் பெரும் பிரயத்தனம் மேற்கொண்டு வருகின்றது.

முபாரக் அரசினால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவையும் மீறி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இரவு முழுக்க கெய்ரோ வீதிகள் தோறும் குழுமியிருந்தனர். இப் பதட்டநிலையைக் கருத்திற்கொண்டு வீதிகளில் ஏராளமான பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

எகிப்தின் எல்லாப் பிரதேசங்களிலும் வெடித்த மாபெரும் மக்கள் கிளர்ச்சியின்போது மக்களுக்கும் அரச துருப்புக்களுக்கும் இடையிலான மோதலில் இதுவரை ஒருவர் கொல்லப்பட்டுள்ளதோடு, ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின்னர் ஆரம்பமான மாபெரும் மக்கள் கிளர்ச்சியினால் குலைநடுக்கமுற்றுள்ள முபாரக் அரசு நாடளாவிய ரீதியில் சகல கைத்தொலைப்பேசி மற்றும் இணைய சேவைகளை முற்றாகத் துண்டித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "எகிப்துக்கு எதிரான மாபெரும் கிளர்ச்சியில் அணிசேரும் மக்கள்வெள்ளம்"

Post a Comment