இஸ்ரேலிய குடியேற்ற திட்டங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணையை நடத்த உத்தரவிடும் தீர்மானம் ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பின் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இஸ்ரேல் நாடு குடியேற்றத் திட்டங்கள் என்ற பெயரில் பாலஸ்தீனர்களின் உரிமைகளை மீறுகிறதா என்பதை ஆராய்வதற்கான சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்பது உட்பட இஸ்ரேலுக்கு எதிரான 5 தீர்மானங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
எல்லைப் பகுதியில் இஸ்ரேலிய குடியிருப்புகளை அமைக்கும் இத்திட்டத்தின் மூலம் தங்களது பகுதியை ஆக்கிரமிக்கிறது என்று பாலஸ்தீனம் குற்றம்சாட்டி உள்ளது.
இதுதொடர்பான தீர்மானத்தை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இஸ்லாமிய நாடுகள் சார்பில் பாகிஸ்தான் முன்வைத்தது.
கியூபா, வெனிசுலா, நோர்வே, இந்தியா, சீனா, ரஷ்யா உட்பட 36 நாடுகள் இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தன. இத்தாலி, ஸ்பெயின், உட்பட 10 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.
அமெரிக்கா மட்டுமே இஸ்ரேலுக்கு ஆதரவாக அதாவது தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தது.
இத்தகைய தீர்மானங்களை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு நிராகரித்துள்ளார். தங்களது பிரதேசத்தில் இத்தீர்மானம் பதற்றத்தை அதிகரிக்கும் என்பதும் இஸ்ரேலின் கருத்து.
0 comments: on "இஸ்ரேலுக்கு எதிராக தீர்மானம் நிறைவேறியது: தனிமையில் அமெரிக்கா"
Post a Comment