தலைப்புச் செய்தி

Wednesday, November 9, 2011

2016 வரை தமிழகத்தில் மின் பற்றாக்குறை நீடிக்கும்-மின்வாரியம் தகவல்

2015-16 வரை தமிழகம் மின் பற்றாக்குறை மாநிலமாகவே திகழும் என்று தமிழக மின்வாரியம் (தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனம) அரசுக்கு அளித்துள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தை மின் மிகை மாநிலமாக மாற்றுவேன் என்று முதல்வர் ஜெயலலிதா கூறி வரும் நிலையில் மின்வாரியத்தின் இந்த உண்மை நிலவர அறிக்கை தமிழக மக்களை கவலைக்குள்ளாக்குவதாக உள்ளது.

இத்தனைக்கும் மின் உற்பத்தியைப் பெருக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், பெருமளவிலான மின்சாரம், தமிழக கிரிடில் சேர்ந்துள்ள நிலையிலும் அதையும் மீறி பற்றாக்குறை பெருமளவில் உள்ளதாக உண்மை நிலவரம் தெரிவிக்கிறது.

மின்பற்றாக்குறையைப் போக்க எடுக்கப்பட வேண்டிய பல்வேறு நடவடிக்கைகள், கட்டுப்பாடுகள் கண்காணிப்புகள் குறித்து தமிழக மின்சார முறைப்படுத்தும் ஆணையத்திடம் மின்சார வாரியம் இந்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

தற்போது தமிழகத்தில் 2500 முதல் 4000 மெகாவாட் மின்சாரம் வரை பற்றாக்குறையாக உள்ளது. நாம் வெளியிலிருந்து வாங்கும் மின்சாரத்தை தேக்கி வைக்கத் தேவையான சக்தி தற்போதைய கிரிடுக்கு இல்லை. இதனால் பல்வேறு கட்டுப்பாடுகள் கண்காணிப்புகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

2011-12 முதல் 2016-17 காலகட்டத்தில் தமிழகத்தின் மின் தேவை 12,462 மெகாவாட் முதல் 18,311 மெகாவாட் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், மின் உற்பத்தியின் மொத்த அளவு 11,263 மெகாவாட்டிலிருந்து 20,152 மெகாவாட்டாக அதிகரிக்கும்.

பல்வேறு மின் உற்பத்தி அதிகரிப்பு நடவடிக்கைகள் தற்போது நடைமுறைக்கு வந்து கொண்டுள்ள போதிலும், எதிர்பார்க்கும் தேவை மற்றும் மின் உற்பத்தி ஆகியவற்றுக்கு இடையே நிறைய இடைவெளி உள்ளது. இருப்பினும் 2016-17 காலகட்டத்தில் தமிழகத்தில் 531 மெகாவாட் உபரி மின்சாரம் தமிழகத்திடம் இருக்கும்.

அதே காலகட்டத்தில், தமிழக மின்வாரியம், தனது கிரிடில் பல்வேறு திட்டங்கள் மூலம் கூடுதலாக 15,957 மெகாவாட் மின்சாரத்தை சேரிக்கும். சில தவிர்க்க முடியாத காரணங்களினால், 2011-12ல் தொடங்கப்பட வேண்டிய சில திட்டங்கள், 2012-13க்கு தள்ளிப் போயுள்ளது.

எண்ணூர் (250 மெகாவாட்), என்எல்சியின் முதலாவது உற்பத்தி நிலையம் (475 மெகாவாட்), தூத்துக்குடி (420மெகாவாட்) ஆகிய அணல் மின் நிலையங்கள் விரைவில் ஓய்வு பெறவுள்ளன. மேலும், தனியார்களிடமிருந்து வாங்கப்பட்டு வரும் மின்சாரத்திற்கான ஒப்பந்தங்களும் முடிவடையவுள்ளன. இதனால், 2010-11 கால கட்டத்தில் 8000 மெகாவாட் மின்சாரம் குறைந்தது. அதேபோல 2016-17ல் இதன் அளவு 6620 மெகாவாட்டாக இருக்கும்.

மின் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு 900 முதல் 3900 மெகாவாட் வரையிலான மின்சாரத்தை பல்வேறு திட்டங்கள் மூலம் வாங்கவும், சேர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "2016 வரை தமிழகத்தில் மின் பற்றாக்குறை நீடிக்கும்-மின்வாரியம் தகவல்"

Post a Comment