தலைப்புச் செய்தி

Sunday, January 23, 2011

உலக வரைபடத்திலிருந்தே துடைத்தெறியப்படும் ஆப்கான் கிராமங்கள்

ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டுள்ள அமெரிக்கத் தலைமையிலான வெளிநாட்டுத் துருப்பினர்களின் கண்மூடித்தனமான தாக்குதல்களினால் ஏராளமான உயிர்ச் சேதங்கள், பெரும் பொருட் சேதங்கள் ஏற்பட்டுள்ள நிலைமைக்குப் புறம்பாக ஓர் ஆப்கானியக் கிராமம் முற்றாக நிர்மூலமாகியுள்ள அதிர்ச்சித் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.


இது பற்றிக் கருத்துரைத்த நேட்டோ துருப்பினர், கந்தஹார் பிராந்தியத்தில் இருந்த தாலிபான் நிலைகளைக் குறிவைத்தே தாம் தாக்குதல்களை நடாத்தியதாகக் கூறியுள்ளனர்.

எனினும், நிர்மூலமாக்கப்பட்டுள்ள தாருக் கொலாச்சே கிராமத்தில் அதிகப் பாதிப்புக்களைச் சந்தித்தவர்கள் ஆப்கானின் அப்பாவிப் பொதுமக்களே என்பதை அனேகமான ஊடக அறிக்கைகள் உறுதிப்படுத்தியுள்ளன.

டெய்லி மெயில் பத்திரிகை இது பற்றி, 'நேட்டோவின் குண்டு மழையினால், மேற்படி கிராமமும் அதன் சுற்றுப்புறமும் முற்றாக நிர்மூலமாக்கப்பட்டு உலக வரைபடத்திலிருந்தே துடைத்தெறியப்பட்டு விட்டன' என்று தெரிவித்துள்ளது.

அதேவேளை, நேட்டோ படையின் தாக்குதல்களால் விளைந்துள்ள அழிவுகளை விளக்கும் நோக்கில் தாக்குதலுக்கு முன்பும் பின்பும் மேற்படி கிராமத்தின் புகைப்படத்தை பிரித்தானிய தினசரியும் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (மேலே உள்ள படத்தில் காண்க.)

அண்மையில் வெளியிடப்பட்டுள்ள மதிப்பீட்டின்படி, நேட்டோ துருப்பினரின் தாக்குதல் நடவடிக்கைகளின் விளைவாக தெற்கு ஆப்கான் பிராந்தியத்தில் மட்டும் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான பொது உடைமைகள் சேதமடைந்துள்ளன. ஏராளமான உயிரிழப்புக்களும் நிகழ்ந்துள்ளன. இதன் விளைவாக நேட்டோ படையினருக்கு எதிரான எதிர்ப்பலைகள் பொதுமக்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றமை அவதானிக்கத்தக்கது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "உலக வரைபடத்திலிருந்தே துடைத்தெறியப்படும் ஆப்கான் கிராமங்கள்"

Post a Comment