கோவை : திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்தவர் தியாகராஜன்(49). கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 2005ம் ஆண்டு பரோலில் சென்ற அவர் தப்பினார். ஒரு ஆண்டுக்கு பிறகு போலீசார் பிடித்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இதற்கிடையே, தியாகராஜன் கடந்த நவம்பர் 4 முதல் 6ம் தேதி வரை தனது தாயை பார்க்க அனுமதி கேட்டு பரோலில் சென்றார்.
வழக்கம்போல் சிறைக்கு திரும்பவில்லை. டிஐஜி கோவிந்தராஜ் உத்தரவின் பேரில், அவரை பிடிக்க கூடுதல் கண்காணிப்பாளர் முருகேசன் தலைமையில் காவலர்கள் கடந்த ஒன்றரை மாதமாக தேடினர். 2 நாட்களுக்கு முன்பு தாராபுரம் ஊதியூரில் உள்ள ஒரு டீ கடையில் நின்றிருந்த தியாகராஜனை பிடித்து மீண்டும் சிறையில் அடைத்தனர். விசாரணையில், தியாகராஜன் கோவை சிறையில் இருந்தபோது, அதிகாரி ஒருவரிடம், ‘நான் ஒரு மந்திரவாதி. செய்வினையை நீக்குவேன்’ என்று கூறியுள்ளார்.
இதை நம்பிய அதிகாரி கைதியை தனது அறைக்கு அழைத்து வந்து, தனக்கு புரமோஷன் தள்ளிப்போவதற்கு காரணம் என்ன என்று விசாரித்துள்ளார். ‘செய்வினைதான் காரணம். அதைப் போக்க ஆட்டுக்குடல், கோழித்தலையுடன் பூஜை நடத்த வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
அதன்படி, அதிகாரியும் அவற்றையெல்லாம் சிறைக்கு கொண்டு வந்து ரகசியமாக கைதியை வைத்து பூஜை நடத்தியுள்ளார். சில மாதங்களிலேயே அவருக்கு புரமோஷன் கிடைத்து, சென்னை புழல் சிறைக்கு மாறுதலாகி சென்றுள்ளார். இதை பயன்படுத்தி தியாகராஜன் பரோலில் வந்தது தெரிந்தது. மும்பைக்கு தப்பி செல்ல முயன்றதாக தியாகராஜன் விசாரணையில் தெரிவித்துள்ளார்.





0 comments: on "சிறையில் ஆயுள் கைதி நடத்திய ரகசிய பூஜை"
Post a Comment