அரசியல் சாசனம் 370ஆவது பிரிவின் கீழ் காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டும் என பாஜக தலைவர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
பாஜக சார்பில் வெள்ளிக்கிழமையன்று ஜம்முவில் நடைபெற்ற பேரணியில் அத்வானி, கட்கரி மற்றும் சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கலந்து கொண்டு பேசினர்.
அரசியல் சாசனம் 370ஆவது பிரிவின் கீழ் காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இது மாநிலத்தின் வளர்ச்சிக்கு மிகப் பெரிய தடையாக உள்ளது. இந்தப் பிரிவு, மக்களின் நலனுக்கு பயன்படவில்லை. மக்களுக்கு எதிராகவே இது அமைந்துள்ளது என்று நிதின் காட்காரி கூறினார்.
இது மேலும் தொடர்ந்தால் தொழில், மின்சாரம், சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் காஷ்மீர் வளர்ச்சி அடைய தடையாக அமைந்துவிடும். எனவே இந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டும். காஷ்மீரில் இப்போது நிலவும் வறுமை, வேலையின்மை, ஊழல் உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளுக்கும் காங்கிரஸ் அரசின் தவறான கொள்கைகளே காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
ஜம்மு, லடாக் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இடம் பெயர்ந்தோர் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். அவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. இடம் பெயர்ந்த காஷ்மீரி பண்டிட்டுகள், லடாக் மக்கள் பற்றிய விவகாரத்தை நாடாளுமன்றத்தில் பாஜக எழுப்பும் என்றும் நிதின் கட்காரி கூறினார்.
காஷ்மீர் குறித்த தனது நிலைப்பாட்டை மத்திய அரசு மாற்றிக் கொள்ளாவிட்டால் மாநிலத்தில் பிரிவினைவாதம் வலுப்பெரும் ஜன சங்கத்தின் நிறுவனர் ஷியாமா பிரசாத் முகர்ஜி அன்றே எச்சரித்தார். அவர் கைது செய்யப்பட்டு 1953-ல் காவலில் வைக்கப்பட்டிருந்த போதே உயிரிழந்தார். நாடு விடுதலை அடைந்து 63 ஆண்டுகள் ஆன பின்னரும் கூட ஜம்மு, லடாக் பகுதி மக்கள் பாகுபாட்டுடன் நடத்தப்படுகிறார்கள். முகர்ஜி சொன்னது சரியே என்பது இப்போது கூட காங்கிரஸ் கட்சிக்கு விளங்கவில்லை. 2-ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் ஆ. ராசாவுக்கு எதிராக முதலில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கூட்டணி கட்டாயங்களுக்காக ஊழலை அனுமதிக்கக்கூடாது என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி கூறினார்.




0 comments: on "காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டும்: கட்காரி!"
Post a Comment