குடும்பத்தினரையோ நண்பர்களையோ சந்திக்கவிடாமல் தடைசெய்து தம்மைத் தனிமைச் சிறையில் அடைத்து வைத்துள்ளமையை எதிர்த்து ஜெனின் அகதி முகாமில் உள்ள ஜமால் அபுல் ஹிஜாவும் பெய்ட் ஃபுரிக்கில் உள்ள அஹத் அபூ கல்மாவும் கடந்த இரண்டு நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என அஹ்ரார் எனும் மனித உரிமைகள் மற்றும் கைதிகளுக்கான கற்கைநெறி மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை (27.11.2010) மேற்படி அமைப்பின் பணிப்பாளர் ஃபுவாத் அல் கஃப்ஷ் கருத்துரைக்கையில், அபூ ஹிஜா தன்னுடைய குடும்பத்தவர்களையும் குழந்தைகளையும் சந்திக்கவிடாமல் கடந்த ஆறு வருட காலமாய் ஒடுக்கமான ஒரு கொட்டடியில் தனிமைச் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். அவரைச் சந்திப்பதற்காக அவரது குடும்பம் வருகைதரும் போதெல்லாம் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறைநிர்வாகம் அபூ ஹிஜாவை வேண்டுமென்றே வேறொரு சிறைச்சாலைக்கு மாற்றிவிடுகிறது என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
மற்றக் கைதியான அபூ கல்மாவின் தண்டனைக் காலத்தை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரசபை ஒவ்வோர் ஆறுமாதத்துக்கு ஒருமுறை நீடித்துக் கொண்டே வருவதோடு, அவரது குடும்பத்தவரைச் சந்திக்கவிடாமலும் தடைசெய்துள்ளது என்று கஃப்ஷ் மேலும் தெரிவித்துள்ளார்.
தமது துணைவர்களுக்கு எதிராக இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரசபை மேற்கொண்டுவரும் வன்முறைகள் மற்றும் உரிமை மீறல்களைத் தடுத்து நிறுத்தி, தமது குடும்பத்தவர்களைக் கிரமமாகச் சந்திக்கக்கூடிய ஒழுங்குகளை மேற்கொள்ள உதவுமாறு மேற்படி இரண்டு பலஸ்தீன் கைதிகளினதும் மனைவியர் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களுக்கு மனுக்களை சமர்ப்பித்துள்ளனர்.




0 comments: on "இஸ்ரேலியச் சிறையில் தொடரும் உண்ணாவிரதப் போராட்டம்"
Post a Comment